சாகித்ய அகாதெமி எழுதிய முதல் கவிதை!


சாகித்ய அகாதெமி எழுதிய முதல் கவிதை!
      இதற்கு முன்னரும் இருமுறை தமிழ்க் கவிஞர்கள் சாகித்ய அகாதெமி விருது பெற்றிருந்தாலும் அவர்களுக்கே அது நிறைவளித்திருக்காது என்பது நிச்சயம்! புரட்சிக்கவிஞன் என்று அறியப்பட்ட பாரதிதாசனை நாடகத்திற்காகப் பாராட்டியதை நாம் பாராட்ட முடியுமா என்ன அதைவிடவும் வெங்கொடுமை! தமிழறிஞராகவே அறியப்பட்ட அ.சீனிவாசராகவனை (அசீரா) அவரது  கவிதைகளுக்காகப் பாராட்டியதுதான்!
      இதே போலத்தான் ஜெயகாந்தன் தி.ஜானகிராமன் க.நா.சுப்ரமணியம் கி.ராஜநாரயணன் பொன்னீலன் போலும் சிறந்த படைப்பாளிகள் விருதளிக்கப்;பட்ட போது அவர்களின் மிகச் சிறந்த (Master Piece) படைப்புகளுக்காக அகாதெமி பரிசளித்துவிடவில்லை என்பதையும் நாம் மறக்க வில்லை.  
      அதேநேரத்தில் ரகுநாதன் ராஜம் கிருஷ்ணன் சு.சமுத்திரம் பிரபஞ்சன் போன்றோருக்கு தகுதியானவர்களின் தகுதியான படைப்புக்கே பரிசு என்று அறிவித்து இற்றுப்போன நமது நம்பிக்கையை ஒட்டவைத்துக்கொண்டே வந்த வேலையையும் மறந்துவிட முடியாது.
      இப்படியான சூழலில் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்திருப்பது சரியான பரிசாகவே படுகிறது!
      உண்மையில் இது சாகித்ய அகாதெமி எழுதியிருக்கும் முதல் கவிதை!
      1976-இல் -அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரியில்- நடந்த அனைத்துக் கல்லுரிக் கவிதைப் போட்டியில் அவரிடம் முதல் பரிசுக் கோப்பைணைப் பெற்ற என்னைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்கள்-புதிய மரபுக் கவிஞர்கள்- நாங்களே பரிசு பெற்றது போலப் பெருமைப்படுகிறோம்!
      இந்த வகையில் 1955-ல் தமிழ் இன்பம் கட்டுரைத் தொகுப்புக்காக ரா.பி சேதுப்பிள்ளை தொடங்கி முதல் 10 ஆண்டுகள் தமிழறிஞர்களே பெற்ற விருதை 1999இல் அப்துல் ரகுமான் - புதுக்கவிதைப் படைப்புக்காகப் பெற்றிருப்பது மிக அருமையான முன்னேற்றம். 
         இது தொடர வேண்டும் என்பதே தமிழகக் கலை இலக்கியவாதிகளின் விருப்பம்! 
      பாராட்டு ரகுமானுக்கு மட்டுமல்ல  விருதுதந்த சாகித்திய அகாதெமிக்கும் தான்!
------- தினமணியில் நான் எழுதிய கடிதம்.  நாள்: 07.01.2000 தினமணி நாளிதழ். -------

1 கருத்து:

  1. Karuppiah Ponnaiah pavalarponka@yahoo.com
    8:26 பிற்பகல் (21 மணி நேரத்திற்கு முன்பு)


    ஆதங்கமும் சரி.. பாராட்டும் சரி.

    From: pavalarponka@yahoo.com
    Sent: Tuesday, January 17, 2012 1:21 PM
    Subject: [வளரும் கவிதை] சாகித்ய அகாதெமி எழுதிய முதல் கவிதை!

    பதிலளிநீக்கு